“வா வா காமா… இங்கு யார்தான் ராமா?”: ‘தமிழ்ப்படம் 2.0’ படத்துக்காக கஸ்தூரி ஆடிய குத்துப்பாட்டு
‘தமிழ்ப்படம் 2.0’ படத்துக்காக ‘வா வா காமா… இங்கு யார்தான் ராமா?’ என்ற குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார் கஸ்தூரி.
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தமிழ்ப்படம் 2.0’. 2010-ம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இது. ‘மிர்ச்சி’ சிவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை மாதம் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே, எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. காரணம், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கெட்டப்பில் சிவா இருப்பது போன்ற காட்சிகள் போஸ்டரில் இருந்தன.
இந்நிலையில், இன்று காலை இதன் டீஸர் வெளியானது. அதில், ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘மங்காத்தா’, ‘விவேகம்’, ‘விக்ரம் வேதா’, ‘துப்பறிவாளன்’ போன்ற படங்களைக் கலாய்த்ததுடன், ஓபிஎஸ்ஸையும் கலாய்த்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதில், ஒரு குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் கஸ்தூரி. ‘வா வா காமா… இங்கு யார்தான் ராமா?’ என்று அந்தப் பாடல் தொடங்குகிறது. அந்தப் பாடலில், கஸ்தூரியுடன் சேர்ந்து சிவா, சேத்தன் உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ளனர். இதுவொரு ஹாட்டான குத்துப்பாட்டாக இருந்தாலும், இதைப் படமாக்கும்போது சிரித்துக் கொண்டேதான் படமாக்கியிருக்கின்றனர். அந்தளவுக்கு செட்டே கலகலப்பாக இருந்திருக்கிறது.