EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐடி துறைக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. நிபுணர்கள் கருத்து..

பெங்களூரு: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலி எண்ணிக்கையும் கிட்டதட்ட நூறினைத் தொடும் நிலையில் உள்ளது. அதிலும் நாடும் முழுவதும் கொரோனாவால் தாக்கம் அதிகரித்து வரும் அதே நேரத்தில், பொருளாதாரம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு முக்கிய துறையும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதில் தப்பி தவறி ஐடி துறை மட்டும் ஏதோ கொஞ்சம் இயங்கி வருகிறது. ஏனெனில் தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கூறி வருகின்றனர்.

ஆனால் பெரு நிறுவனங்களில் இது போன்ற பல வசதிகள் இருந்தாலும், சிறு சிறு ஐடி நிறுவனங்களில் இதுபோன்ற ஓர்க் பிரம் ஹோம் வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கொரோனாவின் தொற்றினால் 2020ம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறை மிகவும் எதிர்மறையான அல்லது பிளாட் ஆன வளர்ச்சியைக் காணலாம் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் 2008ல் நீங்கள் கண்டதை விட (உலகளாவிய நிதி நெருக்கடி) மிக மோசமான நிலையை காணப் போகிறீர்கள். ஏனெனில் தற்போதைய நிலையில் உங்களது வாடிக்கையாளர்கள் செலவினங்களை தற்போதைக்கு அதிகரிக்கவும் போவதில்லை. தற்போதைய செலவினங்களை பராமரிக்கவும் போவதில்லை. இன்னும் உண்மையை சொல்லப்போனால் தங்களது செலவினங்களை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

முக்கியமான துறைகள் மற்றும் நிதி சம்பந்தமான துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் கூட கொரோனா தாக்கத்தினால் வேலையின்மை விகிதம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. பொருளாதாரங்கள் மோசமாக செயல்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகரிக்க போவதில்லை. ஆக இந்த ஆண்டு ஐடி துறைக்கும் கடினமான ஆண்டாகத் தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.