EBM News Tamil
Leading News Portal in Tamil

பெண் குழந்தைகள், மகளிர் சுய உதவி குழுக்களுக்காக ரெப்கோ வங்கி சார்பில் 2 சிறப்பு திட்டங்கள் | 2 Special Schemes by REPCO Bank


சென்னை: பெண் குழந்தைகளுக்கான ‘ரெப்கோ தங்கமகள் சிறப்பு டெபாசிட் திட்டம்’ மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ‘ரெப்கோ விருக்‌ஷா சிறப்பு கடன் திட்டம்’ ஆகியவை ரெப்கோ வங்கிமற்றும் ரெப்கோ நுண்கடன் நிறுவனம் சார்பில் நேற்று தொடங்கப்பட்டன.

இந்த திட்டங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, ‘ரெப்கோ விருக்‌ஷா’ திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி கடனைமகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பிளஸ்-2வில் அதிக மதிப்பெண்பெற்ற மாணவ – மாணவிகளுக்குச் சான்றிதழ் மற்றும் அவர்களின்உயர் கல்விக்கான ஊக்கத்தொகை ஆணைகளை வழங்கினார்.

இதையடுத்து, கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள ரெப்கோ வங்கி அறக்கட்டளை மூலம் இலவச தையல் இயந்திரங்களை வழங்கியதோடு, வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின் கடன்கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு வசதியாக‘ரெப்கோ டிஜி பே’ என்ற திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர், அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பேசியதாவது:

ரெப்கோ வங்கி இந்தியாவில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. இந்த வங்கி தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக லாபம் ஈட்டி வருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் தற்போதுஅமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக 5-வது இடத்தில் இந்தியா உள்ளது.

சமீபத்தில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, விரைவில் 3-வது இடத்துக்கு இந்தியாவரும் என்றார். 2047-ம் ஆண்டில்100-வது சுதந்திர தின விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். அப்போது, உலகளவில் பொருளாதாரம் உட்பட அனைத்திலும் மிகவும்வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாஉருவாகும். கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளும் மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் உள்துறை இணை செயலாளர் அனந்த் கிஷோர் சரண், வங்கியின் தலைவர் இ.சந்தானம், மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ்.இசபெல்லா,வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.