EBM News Tamil
Leading News Portal in Tamil

சொகுசு பயணத்தை அளிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் பஸ்

இந்தியாவில் வர்த்தக ரீதியான பயணத்துக்கான சொகுசுப் பேருந்துகள் சந்தையில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் களம் இறங்கியுள்ளது. ஏற்கெனவே பள்ளிப் பேருந்துகள், நிறுவனப் பணியாளர்கள், சுற்றுலாவுக்கான பேருந்துகள் சந்தையில் நிறுவனம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் வர்த்தக பயணத்துக்கென 15 மீட்டர் நீளம் கொண்ட முழுவதும் தானியங்கி கட்டுப்பாட்டிலான சொகுசு வசதிகள் கொண்ட மெர்சிடிஸ்-பென்ஸ் 2441 சூப்பர் ஹை டெக் ஆட்டோமேட்டிக் பேருந்தினை அறிமுகம் செய்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் ஆலையில் இந்த பேருந்துகள் தயாராகின்றன. இந்த பேருந்துதான் இந்தியாவில் அதிக நீளம் கொண்ட பேருந்தாக இருக்கும். பாரத் பென்ஸ் என்கிற பெயரில் விரைவில் இந்த பேருந்துகள் சாலைகளில் வலம் வர உள்ளன.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 15 மீட்டர் நீளம் கொண்ட இந்த சூப்பர் ஹை டெக் ஆட்டோமேட்டிக் பேருந்தின் 60 சதவீத பாடி கட்டுமானம் அலுமினியத்தால் உருவாக்கப்படுகிறது. இதன் காரணமாக பேருந்து எடை குறைவாக இருக்கும். இதனால் வளைவுகளில் திரும்பும்போது வாகனத்தின் புவியீர்ப்பு சமநிலை மற்றும் 40 டிகிரி வரை சாய்மானம் கிடைக்கும்.
முழுவதும் எலெக்ட்ரானிக் கட்டுப்பாட்டிலான 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிவ் டிரான்ஸ்மிஸன் கொண்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு சொகுசான பயண அனுபவம் கிடைப்பதுடன், எரிபொருளும் மிச்சமாகும். 408 ஹெச்பி இன்ஜின்கள், 1100 ஆபிஎம் டார்க் பவரை வெளிப்படுத்தும். முன்பக்க சஸ்பென்ஷன், மற்றும் பக்கவாட்டு சஸ்பென்ஷன்களும் சொகுசு பயணத்தை அளிக்கும். மிக சிறப்பான பாதுகாப்பினை வழங்கும் வகையில் உயர் ரக எலெக்ட்ரானிக் பிரேக்கிங் சிஸ்டம் இதன் தனிச்சிறப்பு.
59 புஷ்பேக் இருக்கைகளுடன், 14 மீட்டர் லக்கேஜ் பரப்பளவையும் இந்த பேருந்து கொண்டுள்ளது. இந்த பேருந்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று எளிதில் தீப்பிடிக்காத வகையில் எரிபொருள் டேங்க் பாதுகாப்பான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விபத்துகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் எரிபொருள் டேங்க் பேருந்தின் பின்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தின் அறிமுக நிகழ்ச்சி டெய்ம்லர் ஆலையில் சமீபத்தில் நடபெற்றது. இதில் பேசிய டெய்ம்லர் பேருந்து செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் தாமஸ் பிரிக், ஒரகடத்தில் உள்ள ஆலையில் 9 டன்,16 டன் 24 டன் என்கிற வகையில் பள்ளி பயன்பாடு, ஊழியர் வாகனம், சுற்றுலா பேருந்துகளை முழுவதும் பாடி கட்டப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இந்திய சந்தை தவிர ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க, மத்திய ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்கிறோம்.
5 கண்டங்களிலும் 17 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவுக்காக முழுவதும் பாடி கட்டப்பட்ட பேருந்துகள் இங்குதான் தயாராகிறது. ஏற்றுமதிக்கு ஏற்ப பிரேசிலுக்கு ஹெவி வாகனங்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளுக்கு அசெம்பிள் செய்யும் வாகனங்கள் என சந்தையின் தேவைக்கு ஏற்பவும் தயாரிக்கப்படுகின்றன என்றார்.
இந்த ஆலைக்கான உதிரிபாகங்கள் சுமார் 85 சதவீதம் இந்தியாவிலேயே கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்தியாவில் கூடுதல் செயல்பாடாக பஸ் பாடி கட்டுவதையும் டெய்ம்லர் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
2017-ம் ஆண்டில் 906 பேருந்துகளை விற்பனை செய்துள்ளது. 2016-ம் ஆண்டில் 506 பேருந்துகளை டெய்ம்லர் விற்பனை செய்துள்ளது. 2018-ம் ஆண்டில் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் 80 முதல் 100 சதவீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் 142 தொடர்பு மையங்களையும், 34 விற்பனை முகவர்களும் கொண்ட கட்டமைப்பை இந்த நிறுவனம் வைத்துள்ளது.
முழுவதும் பாடி கட்டப்பட்ட பேருந்துகள், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள், அதிகபட்ச வசதிகள் மற்றும் உயர்தரமான தொழில்நுட்பம் இந்த நான்கு அம்சங்கள் அடிப்படையில் டெய்ம்லர் செயல்பாடுகளை வகுத்துள்ளோம். இந்தியாவில் போக்குவரத்து துறையில் பாரத் பென்ஸ் வாகனங்கள் மாற்றங்களை உருவாக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.
ஒரகடத்தில் அமைந்துள்ள இந்த ஆலையில் பாரத் பென்ஸ் என்கிற பெயரில் பேருந்து மற்றும் டிரக் தயாரிப்பினை டெய்ம்லர் மேற்கொள்கிறது. இங்கு பேருந்துகள் தவிர பேருந்து மற்றும் டிரக் சேஸிஸ் தயாரிப்பினையும் மேற்கொள்கிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1500 பேருந்துகள் மற்றும் 3000 சேசிஸ்கள் கட்டும் திறன் கொண்டதாக டெய்ம்லர் அமைத்துள்ளது. இந்த ஆலை சுமார் 400 நிரந்தர பணியாளர்களுக்கும், 1000த்துக்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது.
பென்ஸ் கார்கள் என்றாலே தரையில் மிதக்கும் கப்பல் போன்ற சொகுசு பயணத்தை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சற்றேறக்குறைய இதேபோன்ற பயண அனுபவத்தை பென்ஸ் பஸ்களிலும் உணர முடிகிறது.