சில நொடிகள், 1 லட்சம் துளிகள்.. கொரோனா வேகமாக பரவும் ரகசியம் இதுதான்.. ஜப்பான் விஞ்ஞானிகள் அதிரடி!
டோக்கியோ : கொரோனா வைரஸ் இரண்டு வழிகளில் பரவும் என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மூன்றவதாக ஒரு வழியிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும் என கருதப்படுகிறது. மேலும், உலக நாடுகள் இதுவரை எடுத்து வந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மேலும் கடுமையை உண்டாக்கவும் வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை வேகமாக பரவி, பெரும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது. 9 லட்சம் பேர் உலகம் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 47,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் தான் அதிகம் பரவுகிறது. கொரோனா வைரஸ் பாதித்த மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்கள், அவர்கள் தங்கி இருக்கும் இடம் அல்லது அவர்களின் தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக கருதப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகள் நுண் துளிகள் மூலம் கொரோனா வைரஸ் குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், பேசிக் கொண்டு இருக்கும் போதும், அருகே இருக்கும் போதும், தும்மல், இருமல் இல்லாமலேயே, நுண் துளிகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்கள் இடையே பரவக் கூடும்.