EBM News Tamil
Leading News Portal in Tamil

“நம் உணர்வுகளை ஒருபோதும் மற்றவர்கள்…” – அஸ்வின் மனம் திறப்பு | People Do not Understand Emotions says Ravichandran Ashwin on his retirement


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார்.

பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது, இன்னும் 2 டெஸ்ட்கள் இருக்கும்போது எப்படி ரிட்டையர் ஆவார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், ‘மைக் டெஸ்டிங் 1,2,3’

என்ற பாட்காஸ்ட்டில் மைக் ஹஸ்சியுடன் உரையாடிய அஸ்வின் மேலும் சில விஷயங்களைக் கூறினார்.

“உள்ளபடியே கூற வேண்டுமெனில், 100-வது டெஸ்ட்டுடன் ஓய்வு அறிவிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் சரி, உள்நாட்டுத் தொடர் விளையாடுவோம் என்று முடிவெடுத்தேன். அதாவது நன்றாக ஆடுகிறோம், விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறோம் இன்னும் கொஞ்சம் ஆடலாமே என்று முடிவெடுத்தேன்.

கொஞ்சம் கூட விளையாடலாம் என்பது அர்த்தமுள்ள முடிவுதான். நான் கேளிக்கையுடன் தான் இதைச் செய்தேன். மீண்டும் மைதானத்துக்கு திரும்புவதற்காக நான் மேற்கொண்ட பயிற்சி, உடலுழைப்புகள், கடினமான அடியெடுப்புகள் அனைத்தும் என் குடும்ப நேரத்தை இரையாக்கின என்பதுதான் உண்மை.

சென்னை டெஸ்ட்டுடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். 6 விக்கெட்டுகளையும் சதமும் அடித்தேன். நன்றாக ஆடும் போது ரிட்டையர் ஆவது கடினம். நியூஸிலாந்து தொடரில் ஆடினேன், ஆனால், நாம் தோற்றோம். இப்படியே ஒன்றோன்றாக வந்துகொண்டே இருக்க, ஆஸ்திரேலியா செல்லலாம் என்றே நினைத்தேன். ஏனெனில் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக ஆடினேன்.

பெர்த்தில் நான் தேர்வாகவில்லை என்றவுடன் மீண்டும் எண்ண ஓட்டங்கள் திரும்பின. நமது உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அவர்கள் நம் உணர்வை ஒரு பொருட்டாகக் கருதவில்லை, நம் உணர்ச்சிகள் நம்மோடு, அடுத்தவர்கள் அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள். அப்போதுதான் மேலும் சிந்தித்தேன், அப்போது முடிவெடுத்தேன், ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று” என அஸ்வின் கூறியுள்ளார்.