கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் | India Head Coach Gautam Gambhir Requests Action Over Death Threat
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கவுதம் காம்பீருக்கு, 2 முறை மின்னஞ்சலில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் நான் உன்னை கொல்லப்போகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற அதே நாளில், சந்தேகத்திற்கிடமான கணக்கிலிருந்து கவுதம் காம்பீருக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காம்பீர் ரஜிந்தர் நகர் காவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி மத்திய காவல்துறை துணை ஆணையர் எம்.ஹர்ஷா வர்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கவுதம் காம்பீருக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவருக்கு ஏற்கெனவே காவல்துறை தரப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகவரித்துறை பணியாளர்களுக்கு ஏப்.26-ல் தடகள போட்டி: வணிகவரித் துறை பணியாளர்களுக்கான தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் நாளை (26-ம் தேதி) நடைபெறுகிறது. சென்னை வணிகவரித்துறை விளையாட்டு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடவர், மகளிருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், நடை பந்தயம், தடை தாண்டுதல் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு சாதனை படைக்க உள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் அசத்தல்- 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள் அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் யு-15 பிரிவில் இந்தியாவின் நெல்சன் (55 கிலோ எடைப் பிரிவு), சீன தைபேவின் வாங் ஷெங் யங்கை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 61 கிலோ எடைப் பிரிவில் அபிஜித், 64 கிலோ எடைப் பிரிவில் லக்சயா போகத் ஆகியோர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால் பதித்தனர். மகளிர் பிரிவில் பிரின்சி (52 கிலோ), சம்ருதி சதீஷ் ஷிண்டே (55 கிலோ) ஆகியோரும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.