ராமநாதபுரம் ஸ்பெஷல்: ரூ.28 கோடிக்கு இந்த ஆண்டு கருப்பட்டி உற்பத்தி! | Jaggery production in ramanathapuram
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு 1,300 டன் கருப்பட்டி ரூ. 28 கோடி மதிப்புக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கருப் பட்டியை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்தால் பனைத்தொழிலாளர் வாழ்வாதாரம் மேம் படும் என ராமநாதபுரம் மாவட்ட பனைத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் 2018 கணக்கின்படி சுமார் 2.50 கோடி பனைமரங்கள் உள்ளதாகவும், இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சம் பனைமரங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழிலுக்கு, அடுத்தபடியாக பனைத் தொழில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பனைமரத் தொழில் மற்றும் அது சார்ந்த உப தொழில் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாயல்குடி, திருப்புல்லாணி, ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பனைமரத் தொழில் நடைபெறுகிறது. இத்தொழில் ஜனவரி தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெறுகிறது.
இக்காலத்தில் கருப்பட்டி தயாரிப்பு தொழிலில் சிறப்பாக நடைபெறுகிறது. மருத்துவ குணம் வாய்ந்த உணவு பொருள் என்பதால் பால், டீ, காபியில் கலந்து குடிப்பதற்கும், பனியாரம், தோசை உள்ளிட்ட உணவு பொருட்களுடன் இணைந்து சாப்பிடுவதற்கும் பயன்படுகிறது.
குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடும் பொருளாக உள்ளது. மேலும் உணவுப் பொருட்கள், மிட்டாய்கள், சாக்லெட், சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டுப் பொருள்தயாரிப்பிலும் கருப்பட்டி பயன்படுகிறது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் கருப் பட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சாயல்குடி அருகே நரிப்பையூரைச் சேர்ந்த கருப்பட்டி உற்பத்தியாளர் ஜெ.அந் தோணி கூறும்போது: இந்தாண்டு பதனீர் உற்பத்தி நன்றாக இருந்தது. அதனால் கடந்தாண்டு போலவே இந்தாண்டும் கருப்பட்டி உற்பத்தி, பனங்கற்கண்டு உற்பத்தி நன்றாக இருந்தது. இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,300 டன் கருப்பட்டி உற்பத்தி செய்யப் பட்டது. அதில் 500 டன் விற்றுவிட்டது. இன்னும் 800 டன் இருப்பு உள்ளது.
இதில் 500 டன் விற்றுவிடும். ஆனால் 300 டன் இருப்பிலேயே இருந்துவிடும். இந்தாண்டு ரூ.28 கோடிக்கு கருப்பட்டி உற்பத்தியா னது. இந்தாண்டு சீசன் தொடங்கியது முதல் தற்போது வரை 10 கிலோ கருப்பட்டி பனைத் தொழிலாளர்களிடம் ரூ.2,200-க்கு கொள்முதல் செய்தனர். இதை சிறு வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் ரூ.2,600 முதல் ரூ.2,700-க்கு விற்கின்றனர். மொத்த வியாபாரிகள் ரூ.2,900 வரை சில்லரை கடைகளுக்கு விற்கின்றனர்.
பொதுமக்களுக்கு சந்தையில் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட கருப்பட்டிக்கு புவிசார் குறீயீடு வழங்கினால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக அமையும். கருப்பட்டியை அரசே கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்தால் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் தொழில் இல்லாத 6 மாதங்களுக்கு, மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண நிதி வழங்குவதுபோல், பனைத்தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.
அதேபோல் கலப்பட கருப்பட்டி சந்தையில் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. குறைந்த விலைக்கு விற்பதால் மக்கள் கலப்பட கருப்பட்டியை வாங்குகின்றனர். இதை முற்றிறிலும் தடுத்து சுத்தமான கருப்பட்டி மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். கலப்பட கருப்பட்டி உற்பத்தி, விற்பனையை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று கூறினார்.