பெங்களூரு: பெங்களூருவில் தமிழ்ப் புத்தகத் திருவிழாஇன்று தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் நெறியாளர் கு.வணங்காமுடி கூறியதாவது:
கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக கடந்தஆண்டு பெங்களூருவில் முதல்முறையாக தமிழ்ப் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. இதற்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டும், புத்தகத் திருவிழாவெகு சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1-ம் தேதி (இன்று) மாலை 3 மணிக்கு சிவாஜிநகர் அருகிலுள்ள இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் தமிழ்ப் புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
கர்நாடக சுற்றுலாத் துறை இயக்குநர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடைபெறும் தொடக்க விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கலந்துக்கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
டிசம்பர் 10-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.