“இந்திய கிரிக்கெட் எனது நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானது” – அஸ்வின் | Indian cricket is very close to my heart Ashwin
மொகாலி: இந்திய கிரிக்கெட் தனது நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானது என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான பேட்டியில் அவர் இது குறித்து பேசியுள்ளார்.
சுமார் 20 மாதங்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் அஸ்வின். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் இடம் பெற்றுள்ளார். இருந்தாலும் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் அங்கம் வகிக்கவில்லை. அதுகுறித்து கிரிக்கெட் வல்லுநர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அணிக்கு வேண்டிய வகையில் சிறந்த முறையில் எனது பங்களிப்பை வழங்க முயற்சிப்பேன். இப்போது அணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தடைகளை தகர்த்து, செயல்பாட்டை முன்வைத்து எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விரும்புகிறேன்.
மேற்கு இந்தியத் தொடர் முடிந்ததும் நாடு திரும்பி சில கிளப் போட்டிகளில் விளையாடி இருந்தேன். அணி நிர்வாகம் தயாராக இருக்குமாறு என்னிடம் தெரிவித்தது. எதிர்பார்ப்பு என்பது நமது கைகளில் இல்லை. ஆனால், தொடர்ந்து பயிற்சி வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட்டில் வீரராக இயங்கி வருகிறேன். அதனால் இந்திய கிரிக்கெட் எப்போதுமே எனது நெஞ்சத்துக்கு மிகவும் நெருக்கமானது” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.