கொரோனா பாதிப்பால் யாருக்கு, எப்படி உயிரிழப்பு ஏற்படுகிறது…?
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் அனைவரும் உயிரிழப்பதில்லை. உயிரிழப்பு யாருக்கு ஏற்படுகிறது? எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
உலக அளவில் பெரும் அச்சத் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரும்பாலும் முதியோர்களையும் நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளிட்ட உபாதைகளைக் கொண்டிருப்போரையுமே தீவிரமாக தாக்குகிறது. இறுதியாக, நிமோனியா காய்ச்சல் அதாவது நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி மனிதர்களை, சார்ஸ் கோவிட் வைரஸ் வீழ்த்துகிறது.
கொரோனா வைரஸ், முகம் வழியாக உடலில் நுழைந்த பின், தொண்டை அருகில் உள்ள செல்களில் தொற்றிக் கொள்கிறது. அப்போது சிலருக்கு தொண்டை கரகரப்பு ஏற்படும். பின்னர் சுவாசக் குழாய் வழியாக நுரையீரலின் வெளிப்பகுதியை அடைந்து, அங்கிருந்தபடி பல்கி பெருகி தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கின்றன.
சுவாசக் குழாய் சுவர்களை அரிக்கத் தொடங்கி பின்னர் உட்புறத்தில் வீக்கத்தை வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்த நிலையை உடல் எட்டும்போது பாதிக்கப்பட்டவருக்கு கடும் இருமல் ஏற்படும். சுவாசக் குழாய் சுவர்களை அரித்து ஆல்வியோலி எனும் சுவாச சிற்றரைகளை கொரோனா வைரஸ் அடையும்போது பாதிப்பு அதிதீவிரமாகிறது.
இந்த சிற்றரைகளில்தான் ஆக்சிஜனை உள்வாங்கி கரியமிலவாயுவை பிரித்து அனுப்பும் பணி நடக்கிறது. சுவாச சிற்றரை பாதிக்கப்படும்போது அங்கு நீர் கோர்த்துக் கொள்வதால் ஆக்சிஜனை உள்வாங்கும் அனுப்பும் திறன் கெட்டு நிமோனியா ஏற்படுகிறது.
அந்த கட்டத்தில்தான் பாதிக்கப்பட்ட நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவுக்கு தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. வென்டிலேட்டர் மூலமே சுவாசிக்க முடியும். இந்த கட்டத்தை அடைந்தவர்கள்தான் பெரும்பாலும் உயிரிழக்கின்றனர்.கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் தோன்றினாலும் எதிர்ப்பாற்றலால் வெகு இயல்பாக குணமடைந்துவிடுவர்.
படுக்கையில் ஓய்வு, பானங்கள் அருந்துதல் மற்றும் பாரசிட்டமால் மாத்திரை ஆகியவையே சிகிச்சை. இந்த நிலை ஒரு வாரம் நீடிக்கும். கண்ணுக்குப் புலப்படாத வைரசை உடலுக்குள் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டால் கவலையே இல்லை.