கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துகிறோம் என்பதைப் பற்றி உலகமே பேசுகிறது – பஞ்சாயத்து தலைவர்களிடம் மோடி உரையாடல்
கொரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது என்று பஞ்சாயத்து தலைவர்களிடம் நடத்திய உரையாடலில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது. இது பல புதிய படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் நம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றி விட்டது. இந்த பேரிடர் நாம் இதுவரை சந்தித்திராத பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதன் மூலம் நாம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம்.
மக்கள் தொகை அதிகம் நிறைந்த இந்தியா, சமூக இடைவெளியைப் பின்பற்றி எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவால், நாம் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்தி வருகிறோம் என்பதை உலகமே பேசிக் கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், ஊராட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகளையும் கேட்டறிந்த மோடி, அவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் அறிவுறுத்தினார்.