EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை உள்பட 5 மாநகரங்களில் முழு ஊரடங்கு – என்னென்ன கட்டுப்பாடுகள்…?

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் ஊரங்கு கடுமையாக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் 26.04.2020 காலை 6 மணி முதல் 29.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 26.04.2020 முதல் 28.04.2020 இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கு காலத்தில், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் தடையின்றி நடைபெறும்.

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைச் செயலகம், சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய், பேரிடர் மின்சாரம், ஆவின், உள்ளாட்சிகள், மின்சாரம், குடிநீர் வழங்கள் ஆகிய துறைகள் தேவையான பணியாளர்களுடன் செயல்படும்.

மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளும் அத்தியாவசிய பணிகளுக்கு 33 சதவிகித பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அம்மா உணவகங்கள், ஏடிஎம்.கள் வழக்கம் போல செயல்படும்.உணவகங்களில் செல்போன் மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படும்.

ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும். ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் அரசின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் உரிய விதிகளுக்கு உட்பட்டு செயல்படும். காய்கறி, பழங்களை விற்க நடமாடும் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

மேற்கண்ட பணிகளைத் தவிர, பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகம் உள்பட எந்த இதர அலுவலகமும் செயல்படாது. மேற்கண்ட மாநகராட்சிகளைத் தவிர பிற பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் தொடரும்.