மஹாராஷ்டிரா, குஜராத், ம.பி.யில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – இந்தியாவில் உயிரிழப்பு 420 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை முதல் நேற்றிரவு வரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை தகவல்களின்படி, இந்தியாவில் தற்போது வரை 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1514 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 420 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மாலை முதல் நேற்றிரவு வரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், மஹாராஷ்டிராவில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 3200-ஐ கடந்துள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் நேற்று மிகக்குறைவான புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மத்தியப் பிரதேசம், குஜராத்மற்றும் ராஜஸ்தானிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்த மாநிலங்களில் ராஜஸ்தான் இணைந்துள்ளது. உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களில் மாநில அரசு வெளியிடும் அறிவிப்புக்கும், மத்திய அரசின் சுகாதாரத்துறை இணையதளத்திலும் உள்ள தகவல்களில் மாறுபாடு காணப்படுகிறது.
மாநில அரசு உறுதி செய்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு பல வழிகளில் கணக்கீடு செய்தே, இறுதி செய்வதாக கூறப்படுகிறது.