EBM News Tamil
Leading News Portal in Tamil

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, சென்னை வந்த பிரதமர் மோடி நேரில் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்திலேயே சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாகக் காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு 10 நாட்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை 6.10 மணிக்குக் கருணாநிதியின் உயிர் பிரிந்தது.
இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், தேசியத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும்விதமாக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தார். பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கிருந்து கார் மூலம் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள திமுக கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்புறப்பட்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீஸார் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
ராஜாஜி அரங்குக்கு வந்த பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் முன் தலைவணங்கிக் கும்பிட்டு மரியாதை செலுத்தினார்.
அதன்பின் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, கருணாநிதி துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் மோடி விமான நிலையம் சென்றார்.
பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.